
நான் அமைச்சராக இருந்த போது அனைத்து சிறைச்சாலைகளையும் சென்று அவதானித்துள்ளேன்.அதன்படி இரகசிய முகாம் அல்லது இரகசிய கைதிகள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அத்துடன் தேசியத்தலைவர் பிரபாகரனும் இறந்துவிட்டார் என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனும் கருணா அம்மான் தெரிவித்தார்.
வவுனியாவிற்கு இன்று விஜயம் செய்த அவர் தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் மேற்கொண்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…. தமிழ்மக்களின் வாக்குகள் கோட்டாவிற்கு குறைந்துள்ள நிலையில் எமக்கு கிடைத்த பொன்னான வாய்ப்புகளை இழந்திருக்கிறோம் என்று தான் நினைக்கிறேன். எனினும் காலப்போக்கில் இதில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவோம். வடக்கு கிழக்கில் பல பிரச்சினைகள் இருக்கிறது. கூடுதலான வாக்கினை அளித்திருந்தால் உரிமைகளை கேட்டு பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இருந்தது.
ஆனால் தற்போது வடக்கு கிழக்கு வாக்குகள் தேவையில்லை என்ற அடிப்படையில் தான் அவர் வெற்றிபெற்றிருக்கிறார். இதை பற்றி நாம் கவலயடையதேவையில்லை. எமது மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக அவரிடம் கூறியிருக்கிறோம். அவை அனைத்தும் இடம்பெறும் என்பதை நாம் உறுதியாக கூறிக்கொள்கிறோம். இந்த அரசாங்கம் ஒரு அச்சமற்ற நிலையை உருவாக்கும். கடந்த முறையும் சரத் பொன்சேகாவிற்கு தமிழ் மக்கள் வாக்களித்திருந்தாலும் வெற்றிபெற்ற மகிந்த ராஜபக்ச பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. எனவே வடக்குகிழக்கு தமிழர்களுக்கு இனி பொற்காலமாக அமையும்.

எமது தேசிய தலைவரால் உருவாக்கப்பட்ட கட்சி தான் தமிழ் கூட்டமைப்பு. அதற்காக அவருடன் இருந்து நானும் பாடுபட்டேன். எமது அரசியல் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்காகவே அது உருவாக்கப்பட்டது.ஆனால் இன்று கூட்டமைப்பின் போக்கு மாறிவிட்டது. அவர்கள் தங்களின் நலனுக்காக மக்களை திசை திருப்பியிருக்கிறார்கள். நேரத்துக்கு நேரம் மக்களை ஏமாற்றும் சக்தியாக மாறி வருகிறார்கள். அதனாலே அவர்களிற்கு எதிராக பல கட்சிகள் உருவாகி இருக்கிறது. இந்த தேர்தலிலே மாற்றம் வரவேண்டும் என்று முன்னாள் முதல்வர் விக்கினேஸ்வரன் கூட தெளிவாக கூறியிருந்தார்.
அரசியல் கைதிகள் மற்றும் காணாமல்போனோர் விடயம் தொடர்பாக அவரியடம் ஊடகவியலாளர்கள் கேட்டபோது,
அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும். அது ஒரு சிறு பிரச்சனை. இந்த 134 பேரும் சாதாராண போராளிகள். இரு ஒரு பாரிய பிரச்சனையாக உலகளவில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனை நாம் கோட்டாவிடம் தெரிவித்துள்ளோம். நாம் நிச்சயமாக விடுவிப்போம் என எமக்கு தெரிவித்துள்ளனர். எனவே அதில் உள்ள சட்ட சிக்கல்கள் தீர்க்கப்பட்டு அவர்கள் விடுவிக்கப்படுவார்கள்.
காணாமல் ஆக்கப்பட்டோர் இருக்கின்றார்களா என்பதை அரசு தலைவர் உத்தரவாதம் கொடுக்க வேண்டும்.அதனையும் கோட்டாவிடம் நாம் எதிர்பாக்கிறோம் அல்லது காணாமல் ஆக்கப்பட்டிருந்தால் குறிப்பிட்ட வருடத்திற்கு பின்னர் அவர்களிற்கு மரண அத்தாட்சி கொடுத்திருக்கவேண்டும்.
நான் அமைச்சராக இருந்த போது அனைத்து சிறைச்சாலைகளையும் அவதானித்துள்ளேன். அதன்படி இரகசிய முகாம் அல்லது இரகசிய கைதிகள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அந்த விடயத்தில் தெளிவான முடிவை எமது மக்களுக்கு நாம் வழங்கவேண்டும். இதையும் பெரிய பிரச்சனையாக்கிக்கொண்டிருப்பதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.
அது ஒரு வேதனையான விடயமே. எனது சகோதரனும் காணாமல் ஆக்கபட்டுள்ளார். அவர் மரணமடைந்து விட்டார் என்பது எனக்கு தெரியும். ஆனால் அவரது உடலை நாம் எடுக்கவில்லை. அதற்காக அவர் இருக்கிறார் என்பதை நாம் நம்பவில்லை. போரில் அனைத்து பக்கமும் பிழை நடந்துள்ளது. கொலை செய்யாதவர் எவரும் இல்லை. இதை போலவே விடுதலை புலிகளுடன் நாமும் போரில் நின்றிருந்தோம். நாம் அடைந்த வெற்றியினூடாக கொலைகள் இடம்பெற்றுள்ளது. ஒரு தாக்குதலில் இரண்டாயிரம் ராணுவம் கொல்லப்பட்டால் அதுகும் கொலைதான்.
இது போர் நடந்த பூமி. எனவே நாம் வருந்துகிறோம் என மன்னிப்பு கோரவேண்டும். இதற்கு அரச தலைவரே பொறுப்பு கூறவேண்டும். அதை விட்டு போரில் ஒருவரும் கொல்லப்படவில்லை என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது. இறுதி போரில் வெள்ளைகொடியுடன் சரணடைந்தார்களா இல்லையா என்பது கேள்விக்குறிதான். அப்பிடி நடந்து அரசு அதை மீறி செயற்பட்டிருந்தால் அது கண்டிக்கப்படவேண்டும்.
எனினும் அந்த விடயம் எந்த அடிப்படையில் கூறப்படுகிறது என்பதை ஏற்கமுடியாது. எனினும் போர் இறுதிக்கட்டத்தை அடையும் போது இதனை நிறுத்துவதற்கான சந்தர்பம் பல இருந்தது. அது பயன்படுத்தப்படவில்லை. இறுதிகட்டத்தை நெருங்கும் போது சரணடைதல் என்பது காலம் கடந்த நடவடிக்கையாகதான் நான் பார்க்கிறேன்.
போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொலைசெய்யப்பட்டார்கள். அவர்கள் போரில் நெருங்கியே கொலை செய்யப்பட்டார்கள். திட்டமிட்டு கொலை செய்யப்படவில்லை. இதனை தமிழ் மக்கள் ஏற்றுகொள்வார்கள் என்று நினைக்கிறேன். பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்தாமல் அவர்களை விடுவித்து விட்டு எமது போராளிகள் மடிந்திருப்பார்களாக இருந்தால். உலகம் வரவேற்றிருக்கும்.
வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பாக அவரிடம் ஊடகவியலாளர்கள் கேட்டபோது, வடக்கு கிழக்கு இணைப்பு என்பது பாரிய பிரச்சனை. அது சட்டரீதியாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது இணையவேண்டும் என்பது எங்களுக்கு தேவையான விடயம். அதை கருணா நிராகரிக்கவில்லை. அதனை எதிர்ப்பவர்கள் முஸ்லிம் தலைவர்கள். சிங்கள மக்களும் அதை அச்சத்துடனே பார்க்கிறார்கள். எனவே நடைமுறை சிக்கல்கள் இதில் இருக்கிறதுஇ சமஸ்டி வேண்டும் என்பதற்காகவே நான் புலிகளிடமிருந்து வெளியேறிபோனேன். அவ்வாறான சந்தர்ப்பம் வரும் போது அந்த இணைப்பிற்காக குரல் கொடுப்போம்.
இதேவேளை மாவீரர் நாளை கொண்டாடுவதற்கான அனுமதி நிச்சயம் கிடைக்கும். தேசிய தலைவர் மரணமடைந்தது என்பது உண்மையான விடயம். அது வீரமரணம். அந்த வீரமரணத்தை கூட உரிமை கொள்ளாமல் இருப்பது எமது கோழைத்தனம். தமிழ் தலைவர்களின் கோழைத்தனமாக தான் அதை நான் பார்க்கிறேன். அவருக்காக எப்போதாவது விளக்கேற்றினோமா அல்லது வீரமரணத்தை அடைந்தார் என்று அறிவித்திருக்கிறோமா.
இந் நிலையில்’ மாகாணசபை தேர்தலா பாராளுமன்ற தேர்தலா முதலில் இடம்பெறும் வாய்ப்புள்ளது என கேட்டபோது,
தற்போது மாகாணசபை தேர்தல் முதலில் வராது பாராளுமன்ற தேர்தல் வருவதற்கே வாய்ப்பிருக்கிறது. எனவே தமிழ்மக்கள் பாராளுமன்ற தேர்தலை சிறந்த முறையிலே பயன்படுத்த வேண்டும் என்பது எனது வேண்டுகோள் என்றார்.
Leave a Reply