
இலங்கையில் உள்ள கிராம வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கு நிதி உதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி முன் வந்துள்ளது.
இது தொடர்பான இரண்டாவது ஒருங்கிணைந்த வீதி அபிவிருத்தி முதலீட்டு திட்டத்திற்கான கடன் ஒப்பந்தம், இலங்கை அரசாங்கத்திற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது.
இலங்கை அரசாங்கத்தின் சார்பாக திறைசேரியின் செயலாளர் ஆர்.எச்.எஸ். சமரதுங்கவும், ஆசிய அபிவிருத்தி வங்கியின் சார்பாக, ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கை வதிவிட பிரதிநிதி மஞ்சுள அமரசிங்கவும் கைச்சாத்திட்டுள்ளனர்.
இது தவிர, திட்டத்தினை அமுல்படுத்தும் வீதி அபிவிருத்தி அதிகார சபையுடனும் பிறிதொரு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் 15 கோடி அமெரிக்க டொலர் இந்த திட்டத்திற்காக தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்திற்கு அமைய ஆசிய அபிவிருத்தி வங்கி தொடர்ச்சியாக கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கான நிதி உதவிகளை வழங்கும்.
வீதி அபிவிருத்தி செய்யப்படும் போது கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வசதிகளும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 400 கிலோ மீட்டர் கிராமிய வீதிகள் மற்றும் 340 தேசிய வீதிகள் அபிவிருத்திக்கான அனுமதியினை ஆசிய அபிவிருத்தி வங்கி ஏற்கனவே வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply