
மஹராஸ்டிராவில் பா.ஜ.க ஆட்சியமைத்துள்ளமை, இந்திய ஜனநாயகத்தின் முகத்தில் கரி பூசப்பட்டுள்ளது என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
மஹராஸ்டிராவில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் குறித்து இன்று (சனிக்கிழமை) சமூகவலைத்தளத்தில் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பதிவில் மேலும் தெரிவித்த அவர், “மராட்டிய மாநிலத்தில் நடந்துள்ள அரசியல் ரீதியான அருவருப்பை, அநாகரிகம் என்பதா, அசிங்கம் என்பதா, எதனோடு ஒப்பிடுவது?
‘ஜனநாயகப் படுகொலை’ என்று சொல்வதுகூடச் சாதாரணமான சொல்லாகிவிடுமோ – நடந்திருப்பதின் கடுமையைக் குறைத்துவிட்டதாகி விடுமோ, என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
அரசியல் சட்ட நெறிமுறைகளையே காலில் போட்டு மிதித்துக் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு, மாநில ஆளுநரைத் தலையாட்டி பொம்மையாக்கி, குடியரசுத் தலைவர் மாளிகை மூலமாகவும் இறுதியில் மறைமுக மிரட்டல்கள் மூலமாகவும், ஆட்சியில் உட்கார்ந்திருப்பதை என்ன பாணி அரசியல் என்பது? – பாஜக சித்து விளையாட்டு என்பதா?
இந்திய ஜனநாயகத்தின் முகத்தில் கரி பூசப்பட்டுள்ளது. இது மாபெரும் வெட்கக் கேடு! மாறாத தலைகுனிவு” என பதிவிட்டுள்ளார்.
Leave a Reply