ஞானசாரரை கட்டுப்படுத்துமா புதிய அரசாங்கம்- சிவமோகன் கேள்வி

இனவாத ரீதியாக செயற்படும் ஞானசார தேரரை புதிய அரசாங்கமாவது கட்டுப்படுத்துமா என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிவமோகன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “அண்மைக் காலங்களில் சமூக ஊடகங்களில் வெளிவந்த தகவல்களின் அடிப்படையில் ஞானசார தேரர் தன்னுடைய கடமை முடிந்து விட்டதாகவும் நடைபெறப்போகும் பொதுத் தேர்தலுடன் பொதுபல சேனாவை கலைத்து விடப் போவதாகவும் தெரிவித்துள்ள கருத்தின் ஊடாக அவரது சுயரூபம் வெளிப்பட்டுள்ளது.

முன்னர் ஞானசார தேரர் தலைமையில் தர்கா நகரில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலின் போது  அதன் பின்னணியில்  இவர் இருந்தார் என்பது வெளிப்படையான உண்மை.

இருந்தும் அப்போதிருந்த அரசத் தலைவர்கள் ஞானசார தேரருக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே சிறுபான்மை இனத்தவர்கள் மீது தனது அடாவடிகள்  ஊடாக இனவாதங்களை தூண்டிவிட்டு தனிச்சிங்கள ஆட்சியை அமைப்பதே இவரது நோக்கம் என்பது இப்பொழுது வெளிப்படையாகி விட்டது.

மேலும் இவரது பின்னணியில் நின்று செயற்பட்டவர்களின் முகத்திரைகளும் வெளியாகி வருகிறது.

அன்று தேர்தல் காலத்தில் நீராவியடிப் பிள்ளையார் ஆலய சர்ச்சையில் ஞானசார தேரர் மூக்கை நுழைத்தது எதற்காக என்ற சந்தேகம் எழுகிறது? நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் ஏற்படுத்தப்பட்ட கலவரத்திற்கு மூலகாரணமான இவர் அதே விடயத்தை வைத்து சிங்கள தேசத்தை உசுப்பேத்தி விட முயன்றிருக்கின்றாரா?

ஒரு தேரருக்கு தேவையான எந்த ஒரு அடிப்படை நல்லொழுக்க விழுமியங்களும்  இவரிடம் இருப்பதாக தெரியவில்லை. சண்டியராக செயற்படும் ஞானசார தேரரை  வந்திருக்கும் புதிய அரசாவது கட்டுப்படுத்துமா? என்பதை அரசு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

சிங்களவர்களுக்கு பொருத்தமான தந்தை கிடைத்து விட்டார் என்று கூறப்படுகின்றது. அப்படியானால் சிறுபான்மை இனத்தவர்கள் அநாதைகளாக விடப்பட்டுள்ளார்களா? என்ற கேள்வியை எழுப்ப வேண்டிய நிலையில் நாங்கள் உள்ளோம்.

இந்த நாடு  தமிழ், சிங்கள மொழி பேசும் மக்களுக்கான நாடு.  இரண்டு ஆட்சி மொழிகளைக் கொண்ட நாடு. இங்கு சிங்கள என்ற வார்த்தையை மட்டும் பேசுவது என்பது இனவாத கருத்துக்களை விதைப்பதாகும்.

உரிமைகளுக்காக போராடுபவர்கள் இனவாதிகள் அல்ல. தமிழ்மொழிக்கான அங்கீகாரத்தை வழங்க தவறினால் அதன் உலக நீதி உங்களுக்கான பாடங்களை எதிர்காலத்தில் கற்றுத்தரும்.  அதே போல் கடந்த காலங்களில் கற்றுக்கொண்ட பாடங்களை ஞாபகத்தில் கொள்வது நல்லது” என குறிப்பிட்டுள்ளார்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *