
மகாராஷ்டிராவில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் புதிய அரசு பதவியேற்கும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், என்.சி.பி. கட்சிகள் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் நோக்கத்தில் இடம்பெற்ற கூட்டத்துக்குப் பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவிக்கையில், “மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தினோம். மூன்று கட்சிகளும் இணைந்து புதிய அரசை அமைப்பது என்றும், அரசுக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமை ஏற்பது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மற்ற அம்சங்கள் தொடர்பாக பின்னர் முடிவெடுக்கப்படும்’’ எனக் கூறினார்
மகாராஷ்டிராவில் தேர்தல் நடந்து முடிந்த பின்னர் முதல்வர் பதவியைப் பிரித்துக் கொள்வதில், சிவசேனா மற்றும் பா.ஜ.க. இடையே முரண்பாடு ஏற்பட்டது. இதனால் பா.ஜ.க.வுடன் 35 ஆண்டுகள் தொடர்ந்த கூட்டணியை சிவசேனா முறித்தது. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால் குடியரசுத் தலைவர் ஆட்சி அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து சிவசேனா, காங்கிரஸ், என்.சி.பி. கட்சிகள் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இதற்காக குறைந்த செயற்திட்டத்தைத் தீட்டி ஆட்சி அமைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply