
பிரித்தானியாவில் வசிக்கும் ஏழு வயது சிறுவன் பிறந்ததில் இருந்தே பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு நிற்கவோ நடக்கவோ முடியாமல் இருந்த நிலையில் தற்போது அறுவை சிகிச்சைக்கு பின்னர் முதல்முறையாக தனியாக எழுந்து நின்று நடக்க துவங்கியுள்ளான்.
Milton Keynes-ஐ சேர்ந்த ரவி – உஷா புருத்வி தம்பதியின் மகன் பிரனவ் (7). பிரனவ் 12 மாத குழந்தையாக இருக்கும் போதே அவன் முட்டி போட்டு தவழ சிரமப்பட்டுள்ளான், இதை பார்த்து பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் பிரனவ் பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.
அதன் காரணமாக அவனால் எழுந்து நடக்கவே தனியாக நிற்கவே கூட முடியாது. அவனுடன் யாராவது ஒருவர் எப்போதும் உடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.

இந்நிலையில் National Health Service மூலம் பிரனவுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுக்கப்பட்டது.
ஆனால் அவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் பிரனவ் உடல் நிலை மோசமாக உள்ளதாகவும், அறுவை சிகிச்சை செய்தாலும் பிரயோஜனம் இருக்குமா என சந்தேகிப்பதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து அமெரிக்காவில் தனியார் மருத்துவமனையில் அவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்து ஓன்லைன் மூலம் நிதி வசூலிக்கப்பட்டது.
£100,000 பணம் தேவைப்பட்ட நிலையில் நிதி குவிய தொடங்கியது.
இதையடுத்து பிரனவுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவன் கால்களில் உள்ள அழுத்தம் முற்றிலுமாக நீக்கப்பட்டது.

இதை தொடர்ந்து தற்போது முதல் முறையாக யார் உதவியும் இன்றி பிரனவ் நிற்பதோடு, 30 மீட்டர் வரை நடக்கிறான்.
மேலும் ஊன்றுகோல் உதவியுடன் அவர் செயல்படமுடியும் என தெரியவந்துள்ளது. இது குறித்து உஷா கூறுகையில், பிரனவை கவனித்து கொள்வதற்காக என்னுடைய ஐடி பணியை துறந்தேன்.
முதலில் எப்படி அவன் சிகிச்சைக்கு பணம் கேட்பது என தயக்கமாக இருந்தது, ஆனால் அவனுக்கு அதிகளவில் உதவிகள் கிடைத்தன.
அறுவை சிகிச்சை மட்டுமே அவன் சுதந்திரமாக செயல்பட வழிவகுக்கும் என தெரியும், தற்போது அவனுக்கு நல்ல வாழ்க்கையை கொடுத்துள்ளோம்.
முதலில் அவனுக்கு எந்த உதவியும் செய்ய முடியவில்லையே என வருந்தினேன்.
பலரும் பிரனவுக்கு உதவி செய்தார்கள், முக்கியமாக பெயர் மற்றும் விபரங்களை கூட சொல்லாமல் யாரோ ஒருவர் £700 உதவி செய்துள்ளார்.
நான் அவருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். மக்களின் தாராள மனப்பான்மை மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
உலகில் ஒரு அழகான விடயம் என்னவென்றால் உதவி செய்யும் நபர்கள் பலர் இருக்கிறார்கள் என்பதே என கூறியுள்ளார்.

Leave a Reply