
தமிழ் மக்கள் ஒருமித்து பயணிக்கும்போது நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக்கொண்டு எதிர்காலத்தில் மக்களுக்காக குரல்கொடுக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தமிழ் சமூகத்தின் சொத்தாக கல்வி இருக்கின்றது எனவும் இனி வரும் காலங்களில் கல்வியில் பாரிய வளர்ச்சியினை அடைய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
2019 ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் தோற்றி சித்திபெற்ற 16 மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) காரைதீவு இராமகிருஷ்ண ஆண்கள் பாடசாலையில் அதிபர் துரை. யோகநாதன் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்விற்கு அம்பாறை மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
அதில் கலந்துகொண்டு அவர் உரையாற்றுகையில், “அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் இருப்பை பறிப்பதில் மாற்று சமூகத்தினர் கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கின்றனர்.
தமிழ் சமூகத்தின் சொத்தாக கல்வி இருக்கின்றது. எமது சமூகம் கல்வியின் மூலமே முன்னேற்றம் கண்ட ஒன்று. இனி வரும் காலங்களில் கல்வியில் பாரிய வளர்ச்சியினை அடைய வேண்டும்.
இனி வரும் தேர்தல்களில் அம்பாறை தமிழர்கள் ஒருமித்து பயணிக்க வேண்டும். எமது நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை தக்கவைத்து கொள்வதன் மூலமே நாம் எமது மக்களின் குரலாக ஒலிக்க முடியும்.
இல்லாது போனால் அம்பாறை மாவட்ட தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாவதோடு மாற்று சமூகத்திடம் மண்டியிட்டு வாழ வேண்டிய சூழல் ஏற்படும். மாற்று சமூகத்திடம் ஆண்டான் அடிமையாக வாழ்வதா? இல்லை எமது இருப்பை தக்க வைத்துக்கொள்வதா என்பதனை நாம் உணர்ந்து செயற்பட வேண்டும்” என தெரிவித்தார்.


Leave a Reply