இலங்கை வீரர்களுக்கு விசா நிராகரித்து அமெரிக்கா அதிரடி.. நெருக்கடியில் கிரிக்கெட் வாரியம்

இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியினருக்கு, அமெரிக்கா விசா நிராகரிக்கப்பட்ட பின்னர் வீரர்கள் கரீபியனுக்கு புறப்படுவது தடைப்பட்டுள்ளது.

19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் வீரர்கள் அமெரிக்கா வழியாக ஆன்டிகுவாவுக்கு பயணிக்க திட்டமிடப்பட்டிருந்தனர்.

ஆனால் ஏழு வீரர்களின் விசா விண்ணப்பங்கள் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் நிராகரித்ததை அடுத்து அவர்கள் புறப்படுவது காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கரீபியனில் நடைபெறவிருக்கும் முத்தரப்பு போட்டிகளில் விளையாட மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து 19 வயதுக்குட்பட்டோர் அணிகளுடன் இலங்கை 19 வயதுக்குட்பட்டோர் அணியும் பங்கேற்க இருந்தனர்.

இத்தொடரில் விளையாடுவதின் மூலம் அடுத்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் ஐ.சி.சி இளைஞர் உலகக் கோப்பைக்கு முன்னதாக, ஜூனியர் கிரிக்கெட் வீரர்களுக்கு மிகவும் தேவையான அனுபவம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வீரர்களை கரீபியனுக்கு அழைத்துச் செல்வதற்கான மற்றொரு வழியைக் கண்டறிவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஆனால் அவர்கள் புறப்படுவது அடுத்த வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட வேண்டும் என்றும் இலங்கை கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்தன.

போட்டியின் முதல் ஆட்டம் டிசம்பர் 6 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளதால் இலங்கை அணிக்கு நேரம் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

பல ஆண்டுகளாக இலங்கை அணிகள் லண்டனில் கேட்விக் அல்லது ஹீத்ரோ வழியாக கரீபியன் பயணம் செய்கின்றன.

இருப்பினும், இந்த முறை, லண்டன் வழியாக செல்லும் பாதையுடன் ஒப்பிடும்போது டிக்கெட் விலைகள் குறைவாக இருந்ததால் அமெரிக்கா வழியாக செல்ல இலங்கை கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

19 வயதிற்குட்பட்ட அணியின் செயல்திறனை மேம்படுத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது, எவ்வாறாயினும், 19 வயதிற்குட்பட்ட உலகக் கோப்பைக்கான ஜூனியர் அணியின் தயாரிப்புகளுக்கு இந்த பின்னடைவு மிகப்பெரிய அடியாக அமைந்துள்ளது.


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *