
தமிழகத்தில் கோடீஸ்வரனாக மாற ஆசைப்பட்டு கஞ்சா தோட்டம் அமைத்த நபர் குறித்த பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.
கரூர் மாவட்டத்தின் மயிலம்பட்டி என்ற கிராமத்தில் ஒரு தோட்டத்தில் கஞ்சா செடி பயிரிடப்பட்டுள்ளதாக பொலிசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து அங்கு சென்று பார்த்த போது தோட்டத்தில் சோளப்பயிர், மல்லிகை பூ செடிகளுக்கு இடையில் ஊடு பயிராக கஞ்சா செடி பயிரிடப்பட்டிருந்தது.
இதன் மதிப்பு ரூ 50 லட்சம் என்ற நிலையில் அதை பார்த்த பொலிசார் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த கஞ்சா பயிர் செடியை கடவூர் வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் அருணாச்சலம் என்பவர் 2 வருடத்திற்கு குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்துள்ளார்.
இதை அருணாசலத்தின் மாமனார் தங்கவேல் (70) மூலம் பராமரித்து வந்துள்ளார். தேனி மாவட்டம் வருசநாட்டைச் சேர்ந்த முருகன் என்பவர் கஞ்சா பயிர் செடிகளை தண்ணீர் ஊற்றி வளர்த்து வந்துள்ளார். இதைத்தொடர்ந்து தங்கவேல் மற்றும் முருகனை பொலிசார் கைது செய்தனர்.
முக்கிய குற்றவாளியான அருணாச்சலம் மற்றும் கர்ணன் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை பொலிசார் தேடி வரும் நிலையில் அருணாச்சலம் பெங்களூரில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே காங்கிரஸ் கட்சியில் இருந்து அருணாசலம் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
அருணாச்சலம் முதலில் விவசாயம் பார்த்து வந்துள்ளார். இதில் நஷ்டம் ஏற்பட்டது. எனவே பணம் அதிகம் சம்பாதித்து விரைவில் கோடீஸ்வரனாக நினைத்த போது தேனியைச் சேர்ந்த சின்ன கருப்பு என்ற வேலுத்தேவர் கர்ணன் என்பவர் மூலம் பழக்கம் ஆகியுள்ளார்.
தேனியில் இருந்து கஞ்சா விதைகளை சின்னகருப்பு மூலம் வாங்கி வந்து அதை நெல் விதை போல் விதைத்து கஞ்சா பயிர் நாற்றங்கால் அமைத்து பிறகு நெற்பயிர்களை நடுவது போல நட்டு கஞ்சா செடிகளை வளர்த்துள்ளனர்.
Leave a Reply