
இந்தியாவின் எல்லைப்பாதுகாப்பு வீரர்களுக்கு 100 நாள் விடுமுறை அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
எல்லை பாதுகாப்பு படையின் 55ஆவது ஆண்டு விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லியில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி பாகிஸ்தான், பங்களாதேஷ், சீனா உள்ளிட்ட நாடுகளை ஒட்டியுள்ள இந்தியாவின் எல்லைப்பகுதிகளை கண்காணித்து வரும் வீரர்களுக்கு விடுமுறை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.
மேலும் துணை இராணுவத்தினருக்கு உள்ளதுபோல் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கான தனிநபர் விபத்து காப்பீட்டு தொகை 30 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதுடன், ஓய்வுபெறும் வயது வரம்பு 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
காஷ்மீர் எல்லையில் பணியாற்றும் வீரர்கள் ஜம்முவில் இருந்து டெல்லி வருவதற்கு இலவச விமான வசதி, வீரதீர விருதுகளை பெற்ற வீரர்கள் மற்றும் கடமையின்போது வீரமரணம் அடைந்தவர்களின் மனைவியருக்கு டெல்லியில் குறைந்த விலையில் வீடுகள் உள்ளிட்ட சில அறிவிப்புகளையும் அவர் இன்று வெளியிட்டார்.
Leave a Reply