
சுவிஸ் தூதரக பணியாளர் கடத்தல் விவகாரம் தொடர்பாக அவரை மருத்துவ சிகிச்சைக்காக இலங்கையிலிருந்து சுவிஸிற்கு அழைத்துச்செல்வதற்கு சுவிட்சர்லாந்து தூதரகம் அனுமதி கோரிய நிலையில், அதனை மறுத்துவிட்டதாக வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
வேண்டுகோள்கள் விடுக்கப்பட்ட போதிலும் குறிப்பிட்ட பெண் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளிக்கவில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் தூதரக பணியாளரை அவரின் குடும்பத்துடன் அழைத்துச்செல்வதற்கு அம்புலன்ஸ் விமானத்தை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு சுவிஸ் அதிகாரிகள் முயன்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 25ஆம் திகதி இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் சம்பவம் குறித்து குறிப்பிட்ட பெண்ணிடமிருந்தோ அல்லது தூதுவரிடமிருந்தோ உத்தியோகபூர்வ முறைப்பாடுகள் எதனையும் பெறாதபோதிலும் தூதுவர் வழங்கிய குறைந்தளவு தகவல்களை அடிப்படையாக வைத்து பொலிஸ், மற்றும் குற்றப்புலனாய்வு விசாரணைப் பிரிவு என்பன விசாரணைகளை மேற்கொண்டனர் என தெரிவித்துள்ள அமைச்சர், இந்த விசாரணைகளின்போது குற்றச்சாட்டுகள் சிறிதளவுகூட உண்மையில்லை என்பது தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தங்கள் அரசியல் தலைமைத்துவத்தின் மீது சேற்றைவாரியிறைக்கும் பொய்களையும் பிழையான தகவல்களையும் தெரிவிக்கும் மற்றுமொரு நடவடிக்கையாக இதனை தான் பார்ப்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
Leave a Reply