
கிளிநொச்சியைச் சேர்ந்த பெண்ணொருவர் போலி ஆவணங்களை காண்பித்து பணம் சேகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டமை தொடர்பாக அம்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில்,
கிளிநொச்சி விவேகானந்தா நகரைச் சேர்ந்த ராகினி தனபாலசிங்கம் என்பவர் தனக்கு தொண்டைப் புற்றுநோய் இருப்பதாகவும் அதற்கான சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்கு இரண்டு மில்லியன் ருபா நிதியுதவி தேவை எனவும் போலியான மருத்துவ அறிக்கைகளைச் சமர்ப்பித்து பண மோசடியில் ஈடுபட்டமை தொடர்பில் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் நேற்றையதினம் பல்வேறு விதமான செய்திகள் வெளியாகியுளளன.
குறித்த பெண்ணின் எழுத்து மூலக் கோரிக்கையின் அடிப்படையிலும் கிராம அலுவலரின் சிபாரிசுக்கமைவாகவும் அப்பெண்ணால் சமர்ப்பிக்கப்பட்ட நம்பகத்தன்மையுடைய நோய் நிருணய அட்டை, மருத்துவ அறிக்கை என்பவற்றோடு யாழ் போதனா வைத்தியசாலையில் தொடர்பு கொண்ட என்னால் பெற்றுக்கொள்ளப்பட்ட விபரங்களின் அடிப்படையிலுமே அவரது நோய் நிலைமையை உறுதிப்படுத்தி அவருக்கான உதவியை வழங்குமாறு உதவும் உள்ளங்களிடம் நான் கோரியிருந்தேன்.
கிளிநொச்சி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற பாராளுமன் றஉறுப்பினர் என்ற அடிப்படையில் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண் தான் வாழும் நாட்களை எண்ணிக் கொண்டிருப்பதாகவும் தனது உயிரைக்காக உதவி செய்யுமாறும் உரிய மருத்துவச் சான்றிதழ்களையும் சமர்ப்பித்து என்னிடம் உதவி கோருகின்ற போதும் அதனை நம்பாலோ மனிதாபிமான ரீதியிலான உதவிகளை மேற்கொள்ளாமலே இருக்க முடியாது.
இருதய சத்திர சிகிச்சைக்காக, சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்திய 1000 இற்கும் அதிகமானோர் பதிவுகளை மேற்கொண்டு காத்திருக்கின்ற சூழ்நிலையில் அவர்களுக்கான சத்திரசிகிச்சையை மேற்கொள்வதற்கு காலதாமதம் ஏற்படுமிடத்து அக்கால இடைவெளிக்குள் எத்தனையோ பேர் இறந்து போவதற்கான வாய்ப்புக்கள் மிகக் கூடுதலாக உள்ளன. இவ்வாறான இறப்புக்களுக்கு ஒருவகையில் நாமும் பொறுப்பாளிகளே.
என அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply