
இலங்கையிலிருந்து போதைப்பொருளை முற்றாக இல்லாதொழிக்கும் செயற்றிட்டத்தை புதிய அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்று மூன்று வாரங்கள் கடந்துள்ளன.
அவர் இந்தத் தேர்தலில் பாரிய வெற்றியைப் பெற்றுக்கொண்டுள்ளார். இன்று இலங்கையில் புதிய தலைவரும் புதிய அரசாங்கமும் வந்துள்ளன.
இவர்களுக்கு நாம் முழுமையான ஆதரவினை வழங்க வேண்டும். விசேடமாக அரசாங்கம் என்ற வகையில், நாட்டில் இருக்கும் வறுமையை முற்றாக இல்லாதொழிக்க வேண்டும் என நாம் கேட்டுக்கொள்கிறோம்.
பொருளாதாரத்தையும் அரசாங்கம் பலப்படுத்த வேண்டும். இதற்காக எம்மால் முடிந்த அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்க நாம் தயாராகவே இருக்கிறோம்.
இந்த விடயத்தை ஜனாதிபதியால் மட்டும் தனியாக மேற்கொள்ள முடியாது. இதற்கு பிரதமர் உள்ளிட்டவர்களின் ஆதரவும் அவசியமாகும்.
அத்தோடு மக்கள், அரச உத்தியோகஸ்தர்களும் இதற்கான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
போதைப்பொருள் வர்த்தகம் இன்று தலைத்தூக்கியுள்ளது. இதனை முற்றாக அழித்தொழிக்க வேண்டும். இதனைத்தான் மக்கள் அரசாங்கத்திடம் இருந்து எதிர்ப்பார்க்கிறார்கள்” என மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply