
புத்தளம் – கல்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடாவ கடற்பகுதியில் 10 கிலோ கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகநபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கல்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் தங்கம் கடத்தப்பட்டுள்ளதாகவும் 900 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கம் சந்தேகநபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இந்த கடத்தல் மிக நீண்ட காலமாக இடம்பெற்று வந்தமையும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் கந்தக்குளி மற்றும் கல்பிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை கைப்பற்றப்பட்ட தங்கம் உள்ளிட்ட பொருட்களுடன் புத்தளம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்பிட்டி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை, மதுரங்குளி-விருதோடைப் பகுதியில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக சட்டவிரோதமான முறையில் வளர்த்து வந்த (இந்தியன் நட்சத்திர) வகையைச் சேர்ந்த 51 ஆமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலாவி விமானப்படை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விருதோடைப் பகுதியைச் சேர்ந்த ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சம்பவ இடத்திற்குச் சென்ற வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுத் திணைக்கள அதிகாரிகள் குறித்த ஆமைகளை மீட்டனர்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.






Leave a Reply