
கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படும் சுவிஸ் தூதரக பணியாளர் பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்திருந்தால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய குற்றவியல் சட்டத்தின் கீழ், அவருக்கு 2 தொடக்கம் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க முடியும் என்று சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சட்டத்தரணி யூ.ஆர்.டி.சில்வா தெரிவித்துள்ளார்.
அத்தோடு அவர் ஒரு தவறான அறிக்கையை வெளியிடுவதற்கு யாராவது உதவி செய்திருந்தால், அவர்களும் தண்டிக்கப்பட முடியும் என்றும் அவர் கூறினார்.
மேலும் குற்றப்புனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் அளிக்கும்போது, தனது தேசிய அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளதைவிட வேறு பெயரை அவர் பயன்படுத்தியிருந்தால் அது ஒரு குற்றமாகுமென்றும் அவர் குறிப்பிட்டார்.
எந்தவொரு குடிமகனும் தேசிய அடையாள அட்டையில் உள்ள பெயர்களைத் தவிர வேறு பெயர்களைப் பயன்படுத்த முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த சம்பவம் குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அவரிடமிருந்து சாட்சியங்களைப் பதிவு செய்துள்ளது. அவர் கூறிய தகவல்கள் தவறானது என்று தெரியவந்தால், சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் அவர் மீது குற்றப்புனாய்வுத் திணைக்களம் சட்ட நடவடிக்கை எடுக்கும் என்றும் சட்டத்தரணி யூ.ஆர்.டி.சில்வா தெரிவித்தார்.
சுவிஸ் தூதரக பெண் பணியாளர் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாகவும் , துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் கூறப்பட்ட குற்றச்சாட்டை அடுத்து அவரிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் 3 நாட்களாக, 19 மணித்தியாலங்கள் விசாரணை நடத்தியுள்ளது.
அத்தோடு, இன்றும் அவரிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, அவரிடம் பெறப்பட்ட வாக்குமூல அறிக்கை இன்று நீதிமன்றில் முன்வைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Leave a Reply