
இரண்டு வருடங்களுக்கு மேலாக ரஷ்யாவில் தேசிய அளவில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி, அவரது வீட்டில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
மத்திய ரஷ்யாவின் கசானில் வசிக்கும் 59 வயதான நபர் கடந்த 2017ம் ஆண்டு, ஒரு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டி இருந்தது.
ஆனால் அவர் நீதிமன்றத்திற்கு வர தவறியதால், 2 ஆண்டுகளுக்கு முன் அவருடைய பெயர், தேசிய அளவில் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
அதன்பிறகு பல்வேறு இடங்களில் தேடியும் பொலிஸாரால் அவருடைய இருப்பை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் கசானில் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் எரிவாயு வரி 2,900 பவுண்டுகளை எட்டியும், அதனை செலுத்த தவறியதால், ஊழியர்கள் சிலர் விசாரணைக்காக நேரில் சென்றுள்ளனர்.
அப்போது உள்ளே ஒரு நபர், உறைந்த நிலையில் கிடப்பதை பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த பொலிஸார், இறந்து கிடந்தது தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி என்பதை அடையாளம் கண்டனர்.
அவர் என்ன குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார், எத்தனை நாட்களாக அங்கு இறந்த நிலையில் கிடக்கிறார் என்பது தெரியவில்லை. பொலிஸார் தேடும் பணியில் ஈடுபட்டபோது, அவர் தங்கியிருந்த முகவரியை பார்வையிட்டார்களா என்பதும் தெளிவாக இல்லை.
இந்த நிலையில் வல்லுநர்கள் மரணத்திற்கான காரணத்தை கண்டுபிடிக்க முயற்சித்து வருகின்றனர்.
Leave a Reply