ஜனாதிபதி தேர்தல் தொடர்பான சட்டம் சீர்திருத்தப்பட வேண்டும் – நீதி அமைச்சர்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான சட்டம் சீர்திருத்தப்பட வேண்டும் என நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்திருத்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் முன்னிலையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலுக்காக அரசாங்கம் ஏற்க வேண்டிய பாரிய செலவு, வேட்பாளர்களின் எண்ணிக்கை மற்றும் அனைத்து வேட்பாளர்களையும் கையாள்வதில் உள்ள சிரமம் போன்ற பல காரணங்களே தேர்தல் சட்டத்தை சீர்திருத்தம் செய்யக் காரணம் என்று அவர் இதன்போது குறிப்பிட்டார்.

இதன்பிரகாரம் சம்பந்தப்பட்ட திருத்தங்கள் குறித்து விவாதித்து, பொதுத் தேர்தலுக்கு விரைவாக தீர்வை முன்மொழிய வேண்டும் என்றும் அமைச்சர் அதிகாரிகளை வலியுறுத்தினார்.

மேலும் பெரும்பாலான அரசாங்க அதிகாரிகள் தபால் வாக்குகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படாததால், தபால் மூலம் வாக்களிப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான திருத்தங்களும் தேர்தலின்போது பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்கும் உரிமைகள் அவசியம் என்றும் அமைச்சர் நிமல் சிறிபாலா டி சில்வா குறிப்பிட்டார்.

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பிற தேர்தல்களை இந்தத் திருத்தத்திற்குள் சேர்க்க தேவையான சட்டத் திருத்தங்களைச் செய்யுமாறு அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.

அத்தோடு அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பின்னர் உடனடியாக தொடர்புடைய திருத்தங்களை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *