
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரப்பகுதிகளிலும் ஆற்றுப்படுக்கைகளிலும் குளங்களை அண்டிய பகுதிகளிலும் சட்டவிரோதமான முறையில் மணல் கொள்ளையர்களால் மணல் அகழ்வு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு அரசாங்கத்தின் மணல் கல் என்பவற்றுக்கு பாதை அனுமதிப்பத்திரம் தேவையில்லை என்ற அமைச்சரவை தீர்மானமே காரணம் என மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக இரவு நேரங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்கரையோரங்களின் பல்வேறு பகுதிகளில் மணல் கொள்ளையர்களால் உழவு இயந்திரங்கள் மூலம் மணல் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அளம்பில் பகுதியில் உப்புமாவெளி பிரதேசம் அதனை அண்டிய கடற்கரையோரமாக உள்ள மணல் திட்டுகள் இரவோடு இரவாக கனரக இயந்திரங்கள் மூலம் அகழப்படுவதாகவும் பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மணலைக் கொண்டு செல்வதற்கு வழித்தட அனுமதி தேவையில்லை என்ற நிலை ஏற்பட்ட பின்னரே இந்த மணல் அகழ்வு நடவடிக்கை தீவிரம் பெற்றுள்ளதாகவும் பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த மணல் அகழ்வு தொடருமேயானால் உப்புமாவெளி, உடுப்புக்குளம் கிராமங்களுக்கு அரணாக கடல் உட்புகாதவாறு காத்துக்கொண்டு காப்பாற்றி வைத்திருக்கும் இந்த மண் திட்டுகள் விரைவாக அழிந்துபோகும் அபாயம் எழுந்துள்ளதாகவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
Leave a Reply