
முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவை நாடாளுமன்ற சம்பிரதாயங்களை மீறி கைது செய்துள்ளமையானது, ஜனநாயகத்தையும் மக்களின் ஆணையையும் மீறும் செயற்பாடாகும் என நவ சமசமாஜக் கட்சியின் செயலாளர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.
கொழும்பில், இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“விபத்தொன்றை ஏற்படுத்தியதாகக் கூறப்படும், விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
எனினும். நாடாளுமன்ற சம்பிரதாயங்களை மீறியே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விடயத்தில் ஜனநாயக ரீதியாக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதியொருவரை கைது செய்வது என்பது மக்களின் ஆணையை புறந்தள்ளும் செயற்பாடாகவே நாம் கருதுகிறோம். இது பாசிச காலத்தையே நினைவுப்படுத்துகிறது.
இராணுவத்துக்கும் பொலிஸாருக்கும் பலத்தைக் கொடுத்து ஜனநாயகத்தை அழிக்கும் செயற்பாடுகள்தான் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
எனவே, ஜனநாயகத்தை காப்பாற்றும் நபர்கள் இருப்பார்களாயின் நாம் அவர்களுக்கு இவ்வேளையில் அழைப்பு விடுக்கிறோம். இவ்வாறான புதிய கலாசாரங்களை அழிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என மேலும் தெரிவித்தார்.
Leave a Reply