
தமிழகத்தின் காஞ்சிபுரத்தில் பாம்பை வைத்து பெண் ஒருவர் சர்ப்ப சாந்தி என்னும் நாக பூஜை செய்யும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவிய நிலையில் அப்பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.
வாலாஜாபாத்தில் பாம்பை கழுத்தில் அணிந்து கொண்டு பக்தர்களுக்கு வட பத்திரகாளியம்மன் அருள் வாக்கு சொல்லி வந்தார் பெண் சாமியார் கபில அம்மையார்.
நித்தியானந்தா பாணியில் கையில் சூலத்துடன் பக்தர்களுக்கு காட்சி தரும் கபிலா, கோவிலின் கும்பாபிசேகத்தின் போது 2 பம்புகளை வாடகைக்கு எடுத்து வந்ததாக கூறப்படுகின்றது.
செவ்வாய், வெள்ளி, அமாவாசை, பௌர்ணமி ஆகிய தினங்களில் மட்டும் அருள்வாக்கு சொல்லி வரும் அவரிடம் பல்வேறு பகுதியிலிருந்து வரும் பக்தர்கள் அருள் வாக்கு கேட்டு செல்கின்றனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற கோவில் கும்பாபிஷேக விழாவில் நல்ல பாம்புகளை வைத்து சர்ப்ப சாந்தி என்னும் நாக பூஜை செய்துள்ளார்.
பாம்புகளை துன்புறுத்தி அதனை காட்சிகளாக படமாக்கியதோடு, அதனை யுடியூப்பிலும் இரு தினங்களுக்கு முன்னதாக பதிவேற்றம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, பாம்புகளை சட்ட விரோதமாக அடைத்து வைத்து சித்ரவதை செய்ததோடு, பாம்புகளை வைத்து வித்தை காட்டியது குற்றம் என்பதால் கபிலாவிடம் வனத்துறையினர் விளக்கம் கேட்டனர்.
அதற்கு அம்மன் சொன்னதால் தான் பாம்புகளுக்கு பூஜை செய்ததாகவும், அம்மன் அருள் வந்ததால் தான் பாம்பு தனது கழுத்தில் சுற்றப்பட்டதாகவும் கபிலா புதுமையான விளக்கம் ஒன்றை அளித்தார்.
இதையடுத்து வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பெண் சாமியார் கபிலாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்த வனத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.
Leave a Reply