
பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தமது பிரச்சினைகள் தொடர்பாக கடற்றொழில் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் சந்திப்பை மேற்கொண்டனர்.
இந்த சந்திப்பு, யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
இன்றைய கலந்துரையாடலில், தொண்டர் ஆசிரியர்கள், மீன்பிடியியல் டிப்ளோமா முடித்தவர்கள், இரண்டாம் மொழி பயிற்றுவிப்பாளர்கள், தேசிய வீடமைப்பு அதிகார சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் உட்பட பல்லேறு அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது கடந்த ஆட்சிக் காலத்தில் தங்களுடைய எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படாத நிலையில் இதனைக் கவனத்தில் எடுத்து நிறைவேற்றித் தரவேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து கருத்துத் தெரிவித்த அமைச்சர், சம்பந்தப்பட்டவர்களினால் முன்வைக்கப்படுகின்ற நியாயமான கோரிக்கைள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.
எனினும், தமிழ் மக்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலில் தன்னைப் பலப்படுத்தாமல் தவறான தரப்புக்களின் கருத்துக்களை நம்பி வாக்குகளை அளித்தமையினால், தமிழ் மக்கள் சார்பான பிரச்சினைகளை ஆணித்தரமாக சம்பந்தப்பட்ட இடங்களுக்கு எடுத்துச் செல்ல முடியாத நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
எனவே, அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரை பொறுத்திருக்குமாறும் வரும் தேர்தலில் தன்னுடைய கரங்கள் எந்தளவிற்கு பலப்படுத்தப்படுகின்றதோ அந்தளவு விரைவில் பிரச்சினைக்கான தீர்வை தன்னால் பெற்றுத் தரமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply