
ஜார்கண்ட் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படவுள்ளன. அதற்கமைய வாக்கெண்ணும் நடவடிக்கைகள் இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணி முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
9 மணி அளவில் முதல் சுற்று நிலவரம் வெளியிடப்படும். பிற்பகலுக்குள் இறுதி முடிவுகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஆளும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
81 தொகுதிகளைக் கொண்ட ஜார்கண்ட் சட்டசபைக்கு நவம்பர் 30 முதல் டிசம்பர் 20 வரை 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டன.
இதில் பதிவான வாக்குகள் 24 மாவட்டங்களில் உள்ள தலைமையகங்களில் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு ஜார்கண்ட் மாநிலத்தில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
முதல்வர் ரகுபர் தாஸ், ஹேமந்த் சோரன் உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க. மற்றும் எதிர்க்கட்சியான காங்-ஜார்கண்ட் முக்தி மோட்சா கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவுகிறது.
பெரும்பான்மைக்கு 41 இடங்கள் தேவை என்ற நிலையில், தேர்தலுக்கு பின்னரான கருத்துக்கணிப்புக்கள் காங்., கூட்டணி அதிக இடங்களை பிடிக்கும் என தெரிவித்துள்ளன.
ஆனால் கருத்துகணிப்பு முடிவுகளை பா.ஜ.க. ஏற்க மறுத்துள்ளதுடன், முழு பெரும்பான்மையுடன் தாங்கள் மீண்டும் ஆட்சியை பிடிப்போம் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.
Leave a Reply