யாழ்., கிளிநொச்சியில் சூரிய கிரகண அவதானிப்பு முகாம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

சூரிய கிரகணம் நிகழ்கின்ற நிலையில் பொது மக்கள் பார்வையிடுவதற்கு வசதியாக சூரிய கிரகண அவதானிப்பு முகாம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மைதானத்திலும், கிளிநொச்சியில் அமைந்துள்ள பொறியியற் பீட முன்றலிலும் இடம்பெற்றது.

இந்த சூரிய கிரகணத்தை அவதானிப்பதற்கான ஏற்பாடுகளை கொழும்பு பல்கலைக்கழகம், மேற்கு நோர்வே பிரயோக விஞ்ஞானப் பல்கலைக்கழகம், இலங்கையின் தொழில்நுட்பவியல் மற்றும் புத்தாக்கங்கள் இராஜாங்க அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பௌதிகவியல் துறை மேற்கொண்டிருந்தது.

இலங்கை நேரப்படி காலை 8மணி 9 நிமிடங்களுக்கு ஆரம்பமாகி முற்பகல் 11 மணி 21 நிமிடங்கள் வரை இடம்பெறும் இச்சூரிய கிரகணம் 3 மணித்தியாலயங்களும் 12 நிமிடங்களும் நீடிக்கும்.

அதிலும் 3 நிமிடங்களும் 8 வினாடிகளும் (09:35-09:38) மோதிர வடிவிலான கங்கண சூரிய கிரகணம் (Annular Solar Eclipse) மிகத் தெளிவாகக் காட்சிப்படுத்தப்பட்டது.

வெற்றுக் கண்ணால் சூரிய கிரகணத்தைப் பார்ப்பதைத் தவிர்க்கும் வகையில் சூரிய கிரகண அவதானிப்பு முகாமுக்கு வருகை தந்தவர்களுக்கு விசேட பார்வைக் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. அவற்றைப் பயன்படுத்தி பெருமளவான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மோதிர வடிவிலான கங்கண சூரிய கிரகணத்தைப் பார்த்து மகிழ்ந்தனர்.

இந்நிகழ்வில், தொழிநுட்ப, புத்தாக்க பிரதி அமைச்சர் திலங்க சுமதிபால, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாண பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி மற்றும் யாழ்ப்பாணம், கொழும்பு பல்கலைக் கழகங்களின் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

சூரிய கிரகணத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களிடையே நடத்தப்பட்ட விழிப்புணர்வுப் போட்டிப் பரீட்சையில் தோற்றி பிரதேச செயலாளர் பிரிவுகளில் முதல் ஐந்து இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *