
இலங்கையின் அனைத்துக் பொதுமக்கள் தொடர்பான முழுமையான தகவல்கள் அடங்கிய தேசிய தரவு மையம் (National data centre) ஒன்றை உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கமைய தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம், குடிவரவு குடியகல்வு ஆவணங்கள், பிறப்பு மற்றும் இறப்பை பதிவுசெய்தல் உள்ளிட்ட அனைத்து தனிநபர் தொடர்பான தகவல்களையும் ஒரே தரவுநிலையத்தின் கீழ் கொண்டுவருவதற்குத் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) தகவல் மற்றும் ஊடக தொழில்நுட்ப அமைச்சின் அதிகாரிகளுடன் நடத்திய சந்திப்பின்போதே ஜனாதிபதி இந்த தகவலை வெளியிட்டார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “பொதுமக்கள் தொடர்பான, தேவையான அனைத்து தரவுகளையும் திரட்டுவது செலவுமிக்கதாக இருந்தாலும் நேரத்தை மிச்சப்படுத்தும்.
பல்வேறு திணைக்களங்களில் சேமிக்கப்படுவதற்குப் பதிலாக, ஒரே இடத்தில் அவற்றை சேகரித்து வைத்திருந்தால், நிறைவான பொதுச் சேவையை வழங்க முடியும்.
இதன் மூலம் பொய்யான அல்லது, பொருத்தமில்லாத தகவல்கள் பரிமாறப்படுவதையும் தடுக்க முடியும்” என மேலும் தெரிவித்தார்.
Leave a Reply