
ஐக்கிய அமீரகத்தின் அஜ்மான் மாகாணத்தில் கழுத்து நெரித்து கொல்லப்பட்ட நிலையில் யுவதி மற்றும் இரு பெண் பிள்ளைகளை பொலிசார் சடலமாக மீட்டுள்ளனர்.
சம்பவம் நடந்த அதே குடியிருப்பில் இருந்து 3 வயது சிறுமியை பொலிசார் பத்திரமாக மீட்டுள்ளனர்.
கொல்லப்பட்ட யுவதிக்கு 32 வயது இருக்கும் எனவும், எஞ்சிய இருவருக்கு 16 மற்றும் 13 வயது என தெரியவந்துள்ளது.
அஜ்மான் மாகாணத்தில் உள்ள அல் ரஷீதியா பகுதியிலேயே இக்கொடூர சம்பவம் வெள்ளியன்று அரங்கேறியுள்ளது.
மூவரையும் கழுத்து நெரித்து கொன்றுள்ளதாகவும், தாக்குதலில் இருந்து தப்ப மூவரும் போராடியுள்ளதாகவும் மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தை அடுத்து மாயமான யுவதியின் கணவரை சர்வதேச பொலிசாரின் உதவியுடன் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொலைக்கு பின்னர் 35 வயது மதிக்கத்தக்க அந்த நபர் நாடுவிட்டு சென்றிருக்கலாம் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
ஆசிய நாட்டவர்கள் என மட்டும் தகவல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அவர்கள் எந்த நாட்டவர்கள் உள்ளிட்ட தகவலை பொலிசார் திரட்டி வருவதாக கூறப்படுகிறது.
கொல்லப்பட்ட யுவதியும் கணவரும் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதாக அண்டை வீட்டாரின் மொழியில் இருந்து தெரியவந்துள்ளது.
கொலை நடந்த பின்னர் குறித்த கணவர் மாயமான நிலையில், இது திட்டமிட்ட சம்பவம் என பொலிஸ் தரப்பு சந்தேகம் தெரிவித்துள்ளது.
மேலும், தமது 7 வயது மகனை, மனைவியின் குடும்பத்தாரிடம் ஒப்படைத்த பின்னரே, அவர் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மட்டுமின்றி, ஒரே அறையில் இருந்தும் 3 வயது குழந்தையை அவர் காயப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply