
மத்திய அதிவேக வீதி அமைக்கப்பட்டதன் பின்னர், யாழ்ப்பாணம் வரை அதிவேக வீதி அமைக்கப்படுமென்று பெருந்தெருக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்தார்.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நேற்று (புதக்கிழமை) புனிதப் பொருளை தரிசித்ததன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கண்டி – கொழும்பு மத்திய அதிவேக வீதி 3 கட்டங்களின் கீழ் அமைக்கப்படுகிறது. இவற்றில் 2 கட்டங்களின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் 2 வருடங்களுக்குள் மத்திய அதிவேகப் வீதியின் நிர்மாணப் பணிகளை முழுமையாகப் பூர்த்தி செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
அதன்பின்னர், கொழும்பிலிருந்து இரத்தினபுரி வரையான றுவன்புர அதிவேக வீதியும் குருநாகலில் இருந்து தம்புள்ளை வரையான அதிவேகப் பாதையும் அமைக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.
அதிவேகப் வீதிக்காக சுவீகரிக்கப்படும் காணிகளுக்கு தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நியாயமான இழப்பீட்டு முறை அமுல்படுத்தப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த குறிப்பிட்டார்.
கண்டி நகரின் வாகன நெருக்கடியைக் குறைப்பதற்காக விலியம் கொபல்லாவ மாவத்தையிலிருந்து தென்னக்கும்புர வரை 5 கிலோ மீற்றர் தூரத்திற்கு சுரங்க வழிப் பாதை அமைக்கப்படும். நகரின் வாகன நெரிசலை தவிர்க்கும் வேலைத்திட்டம் இந்த வருடம் ஆரம்பிக்கப்படுமென்றும் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்தார்.
Leave a Reply