
சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் வியாபாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி கோணாவில் கிழக்கு பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.
கோணாவில் கிழக்கு பொது நோக்கு மண்டபத்திலிருந்த பேரணியாகச் சென்ற போராட்டக்காரர்கள், ஊற்றுபுலம் சந்திவரை சென்றனர். இந்த போராட்டத்தில் பிரதேச மக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
அப்பகுதியில் தொடர்ச்சியாக காணப்படும் சட்டவிரோத மது உற்பத்தி மற்றும் வியாபாரம் காரணமாக பல்வேறு பிரச்சினைகள் சமூகத்தில் எழுந்துள்ளதாகவும் அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான மு.சந்திரகுமார் கலந்துகொண்டார்.
இதன்போது பிரதேச மக்களால் அவரிடம் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



Leave a Reply