
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த இசட் பிரிவு பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதற்கு, ம.தி.மு.க பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று (வெள்ளிக்கிழமை) அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்குக் கொடுக்கப்பட்டு வந்த உயர்மட்ட இசட் பிரிவு பாதுகாப்பினை விலக்கிக்கொண்டு இருப்பது தவறான நடவடிக்கையாகும்.
தமிழ்நாட்டில் பெரியார், அண்ணா இலட்சியங்களுக்கு எதிராக, திராவிட இயக்கக் கோட்பாடுகளுக்கு எதிராக திட்டமிட்டுப் பரப்பப்படும் கருத்துகளுக்கு ஸ்டாலினே சரியான எதிர்ப்பைக் காட்டி வருகிறார். மக்கள் செல்வாக்கு அவருக்கு நாளும் அதிகரித்து வருகிறது.
பெரியார் சிலையை உடைப்பது போன்ற கேடான செயல்கள் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உயர்மட்டப் பாதுகாப்பு தொடர்வதுதான் நியாயமானது.
அவருக்குக் கொடுக்கப்பட்டு வந்த காவல் பாதுகாப்பை விலக்கிக்கொண்டதற்காக மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் கண்டனங்கள்” என வைகோ தெரிவித்துள்ளார்.
Leave a Reply