இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அழைப்பு

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது. 

புல்வாமா தாக்குதல், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டமை உள்ளிட்ட காரணங்களினால், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கு இடையிலான உறவில் பாரிய விரிசல் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்திய மத்திய அரசு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது. 

இதுகுறித்து இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கருத்து தெரிவிக்கையில், ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அரச தலைவர்கள் கூட்டத்தை, இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடத்த உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதற்காக ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 8 உறுப்பு நாடுகளுக்கும்,  4 பார்வையாளர் நாடுகள் என அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். 

இந்த நிலையில், ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் பாகிஸ்தானும் அங்கம் வகிப்பதனால், அதன் பிரதமர் இம்ரான்கானுக்கு அழைப்பு விடுக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், அனைத்து தரப்புக்கும் அழைப்பு விடுக்கப்படும் என கூறியுள்ளார். எனினும், அதன்பிறகு என்ன நடக்கும் என்பதை தற்போது கூற முடியாது என ரவீஷ் குமார் கூறியதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *