
போராளிகள் குழு வரட்டும், நல்ல விடயம் தான் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) குற்றம் சுமத்தியுள்ளார்.
வாகரை – மாங்கேணி பிரதேசத்திலுள்ள தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஆதரவாளர்களுக்கான அரசியல் விழிப்புணர்வு கூட்டம் மாங்கேணி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் நேற்று மாலை இடம்பெற்றிருந்தது.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் அந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,
பேராளிகள் மற்றும் குடும்ப தலைவிகளை கவனிப்பதற்கே நாங்கள் கட்சி ஆரம்பித்தோம். அம்பாறையில் போராளி குழுவை கருணா உருவாக்குவதாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
ஏன் போராளிகள் குழு வரட்டும் நல்ல விடயம் தான். நாங்கள் அம்பாறையில் சேவை செய்வதால் இப்போது நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் விசர் பிடித்த நாய் போன்று கத்தி திரிகின்றார்.
கத்தும் நாயிடம் பயன் இல்லை. இவர் பாடசாலை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி விட்டு தான் கத்துகின்றார். இதனை பெரியவர்களிடம் கத்தினால் பரவாயில்லை.
அம்பாறை பனங்காட்டில் வைத்தியசாலை தரமுயர்த்தி எட்டு வருடம். இதனை நான் கூறி பெயர் பலகையை மாற்றி உள்ளேன். இரண்டு மூன்று வருடங்களில் வாகரையில் முற்று முழுதாக குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும்.
கித்துள் உறுகாமம் குளம் இணைக்கப்படும் பட்சத்தில் திருகோணமலை வரைக்கும் நீர் வழங்க முடியும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் குளங்கள் கட்டி வழங்கியது நான் தான். இன்னும் பல குளங்களை தேர்தல் வெற்றிக்கு பின் புனரமைப்பேன்.
மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்த வரையில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி முக்கிய கட்சியாக உள்ளது.
அதனை இணைத்துக் கொண்டு பயணிப்பதற்கு கதைத்துள்ளோம். தேர்தலில் வெற்றி பெற்று இரண்டு உறுப்பினர்களை தெரிவு செய்து அவர்களினூடாக பல வேலைத் திட்டங்களை செய்ய முடியும்.
தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புதுமையை படைத்து வருகின்றார். திடீரென்று அரச அலுவலகங்களுக்கு செல்கின்றார். இதன் காரணமாக அரச அலுவலகங்கள் ஊழல் அற்ற அலுவலகமாக வரும்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் வியூகத்தினை அமைத்து வெற்றி பெற்று அரசினை பயன்படுத்துவோம். இது தொடர்பில் பிரதமருடன் கதைத்துள்ளேன்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று இலட்சம் வாக்குகள் உள்ள தமிழ் மக்களுக்கும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர் தான், ஆனால் 88000 வாக்குகள் இருக்கின்ற முஸ்லிம் மக்களுக்கும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர் தான் வருகின்றது.
இதில் பிழை விடுகின்றோம். நாம் அனைவரும் சேர்ந்து வாக்களித்தால் நான்கு நாடாளுமன்ற உறுப்பினரை பெற முடியும். தற்போது கிராமத்திற்கு இருபது இலட்சம் ஜனாதிபதியின் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தினை மேற்கொள்வது கிராம அபிவிருத்திச் சங்கம். ஆனால் தற்போது அரசியல் கட்சியினர் குழு அமைத்து எங்களினூடாக வந்துள்ளது என்று கூறுகின்றனர்.
அமைச்சராக இருந்து அமைச்சினூடாக வந்தால் மேற்கொள்ள முடியும். இது பொதுவான நிதி இதில் நாம் ஏமாற கூடாது என தெரிவித்துள்ளார்.




Leave a Reply