
சாய்பாபா பிறந்த இடம் குறித்த முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஷீரடியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் சாய்பாபா கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாடிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, சாய்பாபா பிறந்தது பர்பானி நகரில் உள்ள பத்ரி என்ற இடத்திலாகும். ஷீரடி அல்ல. அதனால் பத்ரி நகர வளர்ச்சிக்காக 100 கோடி ருபாய் வழங்கப்படும் என தெரிவித்தார்.
முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் இந்த அறிவிப்பு ஷீரடி பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஷீரடியில் கடையடைப்பு நடைபெறும் என அப்பகுதியினர் அறிவித்திருந்தனர்.
அதற்கமைய உத்தவ் தாக்கரேவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஷீரடியில் இன்று கடையடைப்பு போராட்டம் காலை முதல் நடைபெற்று வருகிறது.
கடையடைப்பு போராட்டம் நடைபெற்றாலும் ஷீரடியில் சாய்பாபா கோவில் திறக்கப்பட்டு பக்தர்கள் வழக்கம்போல் தரிசனம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply